Thursday, September 11, 2014

கோடி



மழை “ ஓ” வெனப் பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த மஞ்சள் பையை இறுக்கிக் கொண்டாள். என்னத்துக்கு இப்படி பேஞ்சு  கெடுக்குது இந்த மழை?” ஓரத்தில் உட்கார்ந்தால் சாரல் அடி அடியென்று அடித்ததால் நடுவில் தள்ளி அமர்ந்தாள். 

நேரம் ரொம்ப ஆகி விட்டதால் பதறிக் கொண்டிருந்தாள்.” பாப்பா வீட்ல தனியாக இருப்பா. மழை வேற இப்படிப் பேயாட்டம் ஊத்துது. இந்தப் புள்ள என்ன பண்ணுதோ?”  மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. “இப்பத் தான் அந்தா இந்தான்னு கொஞ்சமா பாப்பாவுக்கு சொரம் சரியாயிட்டு வருது. இப்ப பாத்து இப்புடி ஊதக் காத்தா வீசுதே? வெளியில எங்கயாவது வந்து நனைஞ்சு வெக்கப் போறா கிறுக்கு. குச்சுக் குள்ளேயே இருந்தா தேவல.பக்கத்து வீட்டுக்காரி கஞ்சியைக் கொடுத்தாளா தெரிலியே?

இது பைத்தியமாட்டம் கதவைத் தட்டிக் கூடக் கேக்காம உக்கார்ந்திருக்குமே? என்னத்தப் பண்றது.கிடக்கட்டும். நாம போயி எழுப்பி கஞ்சி குடுத்துக்கலாம் “ -தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

இந்த மனுசன் வேற நனைஞ்சுகிட்டே இருப்பாரே? பெண் மேலிருந்து ஞாபகம் புருஷனுக்குத் தாவியது. அடுத்த கணமே வேலைக்குப் போகும் முன் சாக்குப் படுகை மறைப்புக்குப் பின்னால் அவளைப் பிடித்துத் திமிறத் திமிற அவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்து குப்பென வெட்கம் அப்பிக் கொண்டது. செல்லமாகத் தலையிலடித்துக் கொண்டு தனக்குத் தானே சிணுங்கிக் கொண்டாள். 

மகிழ்ச்சியின் தொடர்ச்சியாகப் பிரார்த்தனை. “அந்த ராமநாதன் தான் என் குடும்பத்தக் காப்பாத்தணும்.பாப்பாவுக்கு சீக்கிரம் சுகமாயிரணும்”. அவன் பிரசாதம் பைக்குள் இருந்தது. மெல்லப் பையை விரித்துப் பார்த்தாள். விபூதி வாசனை வந்தது. கொஞ்சம் தெம்பாக இருந்தது.வண்டி மெல்லக் கிளம்பியது. மேலே பார்த்து இரு கைகளையும் கூப்பி வேண்டிக் கொண்டாள். “ ராமநாதா காப்பாத்துப்பா...”

-------------------------------------------------------

தலையைக் குலுக்கிக் கொண்டு நிகழ் உலகத்துக்கு வந்தான். இந்தப் பயணம் தான் தன் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கப் போகிறது. கடைசி முயற்சியாக பார்வதியின் அப்பாவிடம் பேச்சு வார்த்தை. இல்லையென்றால் அவர் சம்மதமின்றியே கல்யாணம். இது தான் அவன் முடிவு செய்து வைத்திருக்கிறான். 

பார்வதி தான் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாள். அவள் அப்பா இவனை அத்தனைப் பேச்சு பேசுவதைப் பார்த்தும் அவள் மனம் சஞ்சலத்திலேயே தான் இருக்கிறது. அந்த மட்டில் இவனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் அவளை விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன?

என்ன ஆனாலும் சரி. முடிந்தவரை அவரை சமாதானப் படுத்த முயற்சி. பார்ப்போம். பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். வெளியில் அடித்துக் கொண்டிருந்த மழையை வெறித்தான்.

------------------------------------------------------------------------

ஷ்.. கையெடுய்யா... அட எடுய்யான்னா... மிக அடக்கமான குரலில் பேசியபடி வெட்கமும் குறும்பும் கொப்பளிக்க தன் தோள் மேல் படர்ந்த அவன் கையை விலக்குவது போல் விலக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் கையை அவன் எடுத்து விடக் கூடாதே என்று மனதுக்குள் ஆசை.

அவனுக்கா தெரியாது? கண்களில் மின்னும் குறும்பு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. தைரியமாகச் சீண்டினான். சுற்றிலும் அதிகப் பேர் இல்லாததால் அவர்களைக் கேட்க யாருமில்லை.

வெளியில் பெய்யும் பேய் மழை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.அவன் சீண்டலில் மூச்சு வாங்க அவனை லேசாகத் தள்ளி விட்டு விட்டு சற்றே நகர்ந்து அமர்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே பெய்து கொண்டிருந்த மழையில் அவள் கவனம் பதிந்தது.

மழையின் வேகம் லேசான பயத்தைத் தந்தது. அவள் முகத்தைப் பார்த்தவன் அவளை நெருங்கி அமர்ந்தான். “அவள் முகத்தை நிமிர்த்தியவன், “ என்ன புள்ள பயமா இருக்குதா?” என்று கேட்டுப் புன்னகைத்தான்.” நாந்தான் இருக்கறேன்ல?” என்று கேட்டவாறு அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

இந்த முறை அவன் அணைப்பைத் தடுக்கவில்லை. அவன் தோள் மேல் ஏகாந்தமாகச் சாய்ந்து கொண்டாள். மழை இப்போது பயம் தரவில்லை.
----------------------------------------------------------------
பாதையே சுத்தமாகத் தெரியவில்லை. பழக்கத்தில் மெல்ல செலுத்திக் கொண்டிருந்தார் வண்டியை. லேசான, மிக லேசான பதற்றம் உடலில் பரவிக் கொண்டிருந்தது. இது போன்ற சூழல் அவருக்குப் புதிதல்ல. இருந்தாலும் இந்த முறை என்னவோ. வியர்வை மெல்லக் காதோரம் ஊறிக் கொண்டிருந்தது
.
வெளியில் காற்றோடு சேர்ந்த மழையின் சத்தம் காதைப் பிளப்பது போல் வண்டியின் சத்தத்தையும் மீறிக் கேட்டுக் கொண்டிருந்தது.வீட்டில் மனைவி மருந்து சாப்பிட்டாளா இல்லையா தெரியவில்லை. தான் இல்லாவிட்டால் அலட்சியமாக இருந்து விடுவாள். வழக்கத்தை விட இன்று தாமதம். அதனால் கவலை அதிகமாயிருந்தது.

குழந்தை மாதிரி அவள். கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடக் கூட நான் சொல்ல வேண்டும். அது சரி. எனக்குக் குழந்தை தானே அவள்?அவளுக்கு நான். வேறு யார்?

நினைவு எங்கெங்கோ அலைந்தாலும் பாதையில் கவனம் இருந்தது. எத்தனை வருஷப் பழக்கம்? நிலையம் நெருங்கி விட்டது தெரிந்தது. என்ன இது? ஒரே இருட்டாக இருக்கிறது? மழை இவ்வளவு பலமாகப் பெய்கிறதே? சிக்னல் வேலை செய்யவில்லை போலிருக்கிறதே? என்ன செய்வது? வண்டியை நிறுத்தி விட்டு சிக்னலுக்காகக் காத்திருந்தார். ஐந்து நிமிடம், பத்து நிமிடம். ம் ஹூம். சந்தடியே இல்லை.

பளிச்சென்று வெட்டிய மின்னலில் ஸ்டேஷன் கட்டிடம் தெரிந்து மறைந்தது. வண்டி நின்றிருந்த இடத்துக்கும் ஸ்டேஷனுக்கும் சில நூறு மீட்டர்கள் தான் இருக்கும்.ஒரு முடிவுக்கு வந்தவராக வண்டியின் ஹாரனை நீளமாக ஒலித்தார்.

ஒரு பெருமூச்சை வெளியிட்டு, வண்டியை மெல்ல நகர்த்தினார். ட்ராக்கின் மேல் கரை தொட்டு ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் மெல்ல நுழைந்தது வண்டி.

நாள் : 22 டிசம்பர் 1964
நேரம் : இரவு சுமார் 12 மணி
----------------------------------------------------------------

பின் குறிப்பு :

On the night of 22 December at 23:55 hours, train no.653, Pamban-Dhanushkodi Passenger, a daily regular service which left Pamban with 110 passengers and 5 railway staff, was only few hundred yards from entering the Dhanushkodi Railway Station when it was hit by a massive tidal wave. A few metres ahead of Dhanushkodi, the signal failed. With pitch darkness around and no indication of the signal being restored, the driver blew a long whistle and decided to take the risk. Minutes later, a huge tidal wave submerged all the six coaches in deep water. The whole train was washed away, killing all 115 on board.

தகவல் உதவி : Wikipedia

No comments:

Post a Comment