Saturday, June 21, 2014

ஒற்றை

ஏ சி யை அணைத்து விட்டார்கள். இருந்தாலும் நாள் பூரா ஓடியதன் குளுமை மிச்சமிருந்தது. எலக்ட்ரீஷியன் வந்து ப்ளோரை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு, நான் உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு , என் தலைக்கு மேலே இருந்ததைத் தவிர மற்ற எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுப் போய் விட்டார். லேப்டாப்பிலிருந்து வரும் மிக மிக லேசான உறுமல் கூட பேரொலியாய்க் கேட்டது.அதன் கடிகாரம் ஒன்பது காட்டியது.

மாதக் கடைசி என்றால் கொஞ்சம் பேரிருப்பார்கள் பத்துப் பத்தரை வரை.அப்படியே நானும் நேரத்தை ஓட்டி விடுவேன். இப்போது அதுவுமில்லாததால் ஒருவரும் இல்லை.நான் மட்டும் தான். இன்னும் ஒரு பத்து நிமிஷங்கள் என் டி டி வி, டைம்ஸ் நௌ, தினமணி என்று நெட்டில் மேய்ந்தேன். அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை.இருந்து தான் என்ன செய்வது? ஷட் டவுன் செய்து விட்டுக் கிளம்பினேன்.



மிக நிதானமான பைக் ஓட்டம். வீட்டை நெருங்குகையில் வழியில் எதிரே சீனு வந்து கொண்டிருந்தார். முன்பு குடியிருந்த பிளாட்டின் சொந்தக்காரர். அவசரமாக இடப் புறம் திரும்பி பக்கத்து சாலையில் புகுந்து விட்டேன். ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. ஆனால் வண்டியை நிறுத்தி நலம் விசாரித்தால் நிச்சயம் நான் எதிர் கொள்ளவே கூடாது என்று நினைக்கிற கேள்விகள் கேட்பார். அவற்றுக்கு சிரித்த முகத்தோடு பதில் சொல்லும் நிலமையில் நானில்லை.

அடுத்து இரண்டு தெருக்கள் கடந்து அந்த அண்ணன் கடையில் நின்றேன்.கடைக்குப் பெயரெல்லாம் கிடையாது. அண்ணன் கடை தான். என்னைப் பார்த்ததும் அவர் கல்லில் தோசை போட ஆரம்பித்தார். அவருக்குத் தெரியும். என் மெனு ஒற்றைத் தோசை தானென்று.வாங்கிக் கொண்டு வீடு சேர்ந்தேன்.வண்டியைப் பார்க்கிங்கில் விட்டுப் படியேறி வாசல் விளக்கைப் போட்டேன்.

பூட்டைத் திறந்ததும் அவ்வளவு நேரம் எங்கு தான் ஒளிந்திருந்ததோ.  திபு திபு வென்று தனிமையின் அழுத்தம் வந்து உடலெங்கும் அப்பிக் கொண்டது.அவ்வளவு நேரம் ஏற்படாத அயர்வு சட்டென்று ஏற்பட்டது போல் இருந்தது. இன்னும் இந்த வீட்டில் காலை வரை இருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே அலுப்பாக இருந்தது.எப்போதும் வரும், எனக்குப் பிடிக்காத ஆனால் பழகி விட்ட லேசான முடை வாசனை மெல்ல வரவேற்றது.

அதென்னவோ. வீட்டில் ஆள் இருக்கும் போது , சின்ன சின்ன விஷயங்கள் கூட தானாய் ஒழுங்காக நடப்பது போன்ற ஒரு பிரமை. அப்பா அம்மாவுடன் இருந்த போதும் சரி, அவள் கூட இங்கே இருந்த போதும் சரி. ஆபீசில் இருந்து வந்து உள் நுழைந்ததும் முதலில் வாசல் கதவை சாத்துவது, அப்புறம் ஷூ கழற்றுவது, பையை அதனிடத்தில் கொண்டு வைப்பது, ஏசியை ஆன் பண்ணுவது என்று வரிசைக் கிரமமாக செய்வேன். செய்வேன் என்பதை விடத் தானாக நடக்கும்.

தனியாக இருக்கத் தொடங்கியதும் இந்த மாதிரி சின்ன விஷயங்களில் நிறைய தடுமாற்றம். வரிசைக்கிரமமான நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்று விடுபட்டு விடும். ஒரு சில நாட்கள் ஷூவை கழற்றாமலேயே மறந்து வீட்டுக்குள் வந்து இருக்கிறேன். வீட்டில் ஆளிருப்பதற்கும் இவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று திட்டமாய்ச் சொல்ல முடியவில்லை.பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகளெல்லாம் ஸ்திரமான ஆண்களுக்கு ஏற்படுமா என்ன? அப்படி ஏற்பட்டால் இவை எல்லாம் நடக்குமா என்ன? ஒன்றும் புரியவில்லை.   அப்புறம் இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் சரிப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறேன்.



இன்றைக்கு மேலே வந்து ஷூ கழற்றும் போது தான் ஞாபகம் வந்தது. வண்டியைப் பூட்டாமல் வந்திருக்கிறேன்.கீழே இறங்கிப் போய்ப் பூடி சாவியை எடுத்துக் கொண்டு வந்தேன்.கிச்சனுக்குள் போய்த் தண்ணீர் குடித்தேன். அடுப்படியை இப்போதெல்லாம் உபயோகிப்பது அதற்கு மட்டும் தான். கேஸ் ஸ்டவ் பிசுக்கு பிடித்துப் போயிருந்தது. காபி டீ குடிப்பதில்லை. அதிலும் என்னவோ சலிப்பு.

உடை மாற்றிக் கொண்டு வந்து சோபாவில் சாய்ந்தேன். டி வி. என்னவோ தத்துபித்தென்று காமெடி. எல்லாக் காதல் பாடல்களும் அர்த்தமில்லாதவைகளாகத் தோன்றி எரிச்சல் மூட்டின. வேறு வழியே இல்லாமல் நியூஸ் சேனல். ஆபீஸில் மேய்ந்த அதே செய்தி. அடுத்த புதுப் பரபரப்பு ஏதும் நடந்திருக்கவில்லை.எங்கேயோ இலக்கின்றி வெறித்துக் கொண்டு இருந்தேன். கைகள் மட்டும் ரிமோட்டை நோண்டிக் கொண்டிருந்தன.

சுயநினைவுக்கு வந்து மெல்ல எழுந்து போய் பிரிட்ஜைத் திறந்து அதை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தேன். தினமும் கொஞ்சமேனும் ஈடுபாட்டுடன் செய்வது இந்த ஒரு வேலை மட்டும் தான். நிச்சயம் இது துக்கத்தை மறப்பதற்கு அல்ல என்பது எனக்குத் தெரியும்.

ஆறு மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். பிடிப்பு பாசம் என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்கள் அப்போது தான் வளாரத் தொடங்கியிருந்த நேரம் என்பதால் பிரிவு நிச்சயம் அந்த வகையில் வேதனை தரவில்லை. திருமணமான புதிதில் திகட்டத் திகட்ட பழகியிருந்த விஷயம் தான் இரவில் தூங்க விடாமல் படுத்தும். அதை மறந்து கொஞ்ச நேரமாவது தூங்கவே இது. மனதும் மூளையும் நாம் சொல்லும் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவள் இல்லை என்றால் இல்லை என்று அமைதியாயிருக்கின்றன. இந்த உடம்புக்கு எப்படிப் புரிய வைப்பது.

அவள் போன பிறகான இந்த ஆறு மாதங்கள் அவளைப் பற்றி நினைத்து வருந்தியதை விட சுற்றி இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளும் அள்ளி வீசும் அனுதாபங்களும் தான் சலிப்பையும் எரிச்சலையும் உண்டு பண்ணுவதாக இருந்தன.அம்மா அப்பாவுடன் போய் இருந்து விடலாமா என்று தோன்றிய சின்ன நப்பாசையை அடியோடு னசுக்கி  விட்டேன். கழிவிரக்கத்தின் வாய்க்காலே அங்கு தான்.

தனிமை சில சமயங்களில் அதீதமாய்ச் சுட்டாலும் கடக்கக் கூடியதாய் அதை மாற்றும் முயற்சிகளில் ஓரளவு வெற்றி பெற்றுக் கொண்டிருந்தேன். அவ்வப்போது அவளை மூடியிருந்த துணி விலக்கப் பட்ட போது தெரிந்த சிதைந்த முகம் நினைவில் வந்து துணுக்குறச் செய்தாலும் அதையும் விழுங்கிக் கொள்ளப் பழகியிருந்தேன்.இது மட்டும் தான் ஒரே உறுத்தல். ஆனால் உடலை நிலையில் வைக்கத் தூங்கினால் தான் ஆகும். அதற்கு இது அவசியம்.

சில சமயம் எதற்காக இப்படி எல்லாம் அக்கறை கொண்டு செய்ய வேண்டும் எதை நோக்கிப் போகிறேன் என்று கேள்வி எழும். காரணமில்லாமல் சிரிப்பும் வரும்.

சரியாய் மூன்று ரவுண்டுகள். முடித்த பின் தோசையைப் பிரித்தேன். ஆறிக் காய்ந்து போயிருந்தது. உடைத்துத் தின்று விட்டு, படுக்கையில் போய் விழுந்தேன். டிவியை அணைத்தேனோ? ஞாபகம் இல்லை. ஓடினால் தான் என்ன?

மறுநாள். அதே கிளம்பல். அதே சாலை, அதே ஆபீஸ். அதே வேலை. அன்று என்னவோ மனம் செல்லவே இல்லை. உட்காரவும் பொறுக்கவில்லை.அதைக் கொஞ்சம் குடித்தால் தேவலாம் போலிருந்தது. வெளியில் எங்கேயும் போக விருப்பமில்லை. வீட்டுக்கே போக எண்ணிக் கிளம்பி விட்டேன். நல்ல வெளிச்சம் மிச்சமிருந்தது.

வீடு வந்து சேர்ந்தேன்.உடை மாற்றி அதை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தேன். வாயில் வைக்கும் முன் தட்டென்று ஒரு சத்தம். பால்கனிப் பக்கமிருந்து கேட்டது.
எழுந்து போய்ப் பார்த்தேன். ஏப்ரல் மாதமாயிற்றே. பள்ளிகளுக்கு லீவு விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. பின் பக்கமிருந்த சிறு மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆட்டம்.வெளியே வந்ததும் கீழேயிருந்து குரல்." அங்கிள்... பால் பால்கனில விழுந்துடுச்சு. ப்ளீஸ் எடுத்து போடுங்க அங்கிள்" என்று. அபார்ட்மென்ட் செகரேட்டரி சிவனேசன் மகன் அபினேஷ். இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?

"பால் குடுக்கணும்னா ஒரு கண்டிஷன். என்னையும் வெளாட்டுக்கு சேர்த்துகிட்டா தான் குடுப்பேன். ஓகேவா?" என்றேன் சிரித்துக் கொண்டே.

அவர்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டவர்கள், " பால் எடுத்துட்டு வாங்க அங்கிள் விளையாடலாம்" என்றார்கள். அவ்வளவு பெரிய உருவமாக அச்சுறுத்தும் படி இல்லாததாலும் பந்தைக் கண்ணாடி மேல் அடித்ததற்கு எதுவும் சொல்லாததாலும் என்னை சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்பார்கள் போல.

" இரு வரேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து கையில் கிடைத்த ஏதோ ஒரு டீ ஷர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அவசரமாகக் கதவை சாத்தி விட்டுப் படியிறங்கினேன். ரொம்ப நாளாக காணாமல் போயிருந்த சுறுசுறுப்பு கொஞ்சமாக வந்தாற் போலிருந்தது.

அடுத்த ஒரு மணி நேரம் இருட்டும் வரை வியர்க்க வியர்க்க விளையாட்டு. முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பிறகு சமாளித்துக் கொண்டேன்.பிளாட்டிலிருந்து ஒரு சில பெண்கள் எட்டிப் பார்த்து ஏதோ கமென்ட் அடித்தது ஐந்து நிமிடங்கள் மட்டும் கூச்சமாக இருந்தது.

தொப்பலாய் நனைந்து வீட்டுக்குள் வந்து சோபாவில் விழுந்தேன். எடுத்து வைத்து விட்டுப் போயிருந்தது அப்படியே இருந்தது. இப்போது அதை அருந்தும் மனநிலை இல்லை. அதை அப்படியே எடுத்து பிரிட்ஜுக்குள் வைத்தேன். டி வியைத் திருப்பினால் ஏதோ ஒரு சேனலில் கிரிக்கெட் மாட்ச். பார்த்தே பல நாட்களாகிறது.மெல்ல அதில் ஆழ்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்துத் தான் பசி உறைத்தது.

ஓடியாடி விளையாடியதன் விளைவு. இன்று நிச்சயம் ஒரு தோசை போதாது. வீட்டைப் பூட்டிக் கொண்டு அண்ணன் கடைக்குப் போனேன்.என்னைக் கண்டதும் தோசை போட ஆரம்பித்தவர், நான் உள்ளே போய் உட்கார்ந்து " அண்ணே ரெண்டு பரோட்டா" என்று சொன்னதும் ஏற இறங்கப் பார்த்தார். புன்னகைத்தாரோ?

நன்றாக சாப்பிட்டு விட்டு வீடு சேர்ந்தேன்.புத்தக அடுக்கிலிருந்து ஏதோ ஒரு புத்தகத்தை உருவினேன்.நாஞ்சில் நாடன் கதைகள் என்றது அட்டை. ரொம்ப நாளாக எடுக்காததால் ஒரே தூசி. நன்றாகத் துடைத்தேன். போய் கட்டிலில் விழுந்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் வலக்கையை தூக்க முடியவில்லை. ரொம்ப நாட்கள் கழித்து விளையாடியதன் விளைவு. உடலில் சோர்வு தெரிந்தது. ஆனால் உள்ளுக்குள் எங்கோ காணாமல் போயிருந்த உற்சாகம் மெல்ல மீண்டாற் போலிருந்தது.

புறப்பட்டு பைக் ஸ்டார்ட் பண்ணும் போது அபினேஷ் எதிரே வந்தான். கையில் பால் பாக்கெட்.புன்னகைத்து " குட் மார்னிங் அங்கிள்" என்றான்.

" என்ன அபினேஷ் இன்னிக்கும் விளையாடுவீங்களா?" இது நான்.

" ஆமா அங்கிள். நீங்க வரீங்களா இன்னிக்கும்" என்றான்.

" நிச்சயமா" என்று சொல்லி விட்டு பைக்கை உதைத்துக் கிளம்பினேன். காற்றில் சட்டைக் காலர் படபடத்தது.வேகம் கொஞ்சம் கூடியிருந்தது.

அது சரி ..வீட்டைப் பூட்டினேனா?

Saturday, June 14, 2014

அர்த்தமில்லாதது

ஒற்றைக் கால் செருப்புடன் இன்னொரு கால் செருப்பைத் தேடிக் கொண்டு மெல்ல நடந்தேன். மெல்ல என்றால் மிக மிக மெதுவாக.ஏன்? தெரியவில்லை. காரணம் புலப்படவில்லை.

உடன் வந்த நண்பன் ஏதோ பேசிக் கொண்டே வந்தான். என்ன பேசுகிறான்? புலப்படவில்லை. ஆனால் காணாமல் போன என் செருப்பைப் பற்றி முதலில் பேசினான். அப்புறம் நிறைவேறுமோ நிறைவேறாதோ என்ற நிலையில் இருக்கும் என் காதல் ஆசையைப் பற்றி பேசினான். சரியான வார்த்தைகளைத் தான் கிரகிக்க முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை.

ஒரு புறம் முழுக்க வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள். சிதறிக் கிடந்த துடை துணிகள், சிந்திக் கிடந்த ஆயில் கறைகள். இன்னொரு புறம் வரிசையாக ஷட்டர் போட்டு மூடப் பட்ட கடைகள்.   எல்லாவற்றையும் ஒரே போர்வையாகப் போர்த்தியிருந்த இருளில் குழைத்த அமைதி. ஏன் ஒரு கடை கூடத் திறக்கவில்லை? தெரியவில்லை.

கீழே குனிந்து கவனமாக செருப்பைத் தேடிக் கொண்டே நடந்தேன். பாதை முடியும் இடம் வரை தேடியாயிற்று. காணவில்லை. திரும்பிப் போகலாம். அருகிலிருந்த நண்பன் காணவில்லை. பெரிதாகக் கவலைப் படத் தோன்றவில்லை. வீட்டுக்குப் போயிருப்பான். திரும்பி நடக்காமல் மெல்ல பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன். லாரிகளின் அடியில் பார்த்தபடியே.

ஒரு லாரியின் அடியில் அந்த சிறுவன் இருந்தான். கீழே கிடந்த குப்பைகளின் இடையே சில்லறைகள் சிதறிக் கிடந்தன.  குத்துக்காலிட்டு அமர்ந்து அவைகளை ஒவ்வொன்றாகத் தேடித் தேடிப் பொறுக்கிக் கொண்டிருந்தான். தோள் தொட்டுத் திருப்பினேன். திடுக்கிட்டுத் திரும்பினான்.

"என்னடா தேடற?"

" என் காசெல்லாம்  இங்க விழுந்திடுச்சு அண்ணா... அதான்".

"எப்படி விழுந்தது?"

" காலேல விளையாடும் போது விழுந்திடுச்சு. "

"இப்ப வந்து தேடற?"

" காலைலயே தேட ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அந்த பேய் வந்து என்னைப் பிடிச்சுகிட்டு கலாட்டா பண்ணிடுச்சு"

" இங்க பேய் இருக்கா என்ன?"

" ஆமாண்ணா... அந்த வெள்ளைப் பேய். காலைல வந்து என்னைப் பிடிச்சுகிட்டு ஒரே அட்டகாசம். தப்பிச்சா போதும்னு ஓடிட்டேன்.இப்ப தேடறேன்"

"சீக்கிரம் வீட்டுக்குப் போ".. தேடல் வெற்றி பெற வாழ்த்தி விட்டு மீண்டும் பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.



மற்றொரு புறம் மூடியிருந்த வரிசைக் கடைகளில் ஒரே ஒரு கடையில் மட்டும் வெளிச்சம். போகும் போது இந்தக் கடை திறந்திருக்கவில்லையே?

எட்டிப் பார்த்தேன்.

ஊதுபத்தி மணம் கவிந்து கொண்டிருந்தது. கீழே எழுதுவதற்கென்று போடப்பட்டிருந்த குட்டை மேஜை. அதன் கீழ் பட்டுத் துணி விரிக்கப் பட்டிருந்தது. அருகில் சில பல ஓலைச் சுவடிகள். ஒரு மஞ்சள் பை. மஞ்சள் நிற சுவற்றில் ஓரிடத்தில் குங்குமத்தால் எழுதப் பட்டிருந்த ஓம். இந்த இடம் எங்கோ ஏற்கனவே பார்த்தாற்போல் இருக்கிறதே?

கண் மூடி சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவரையும் ஏற்கனவே எங்கோ பார்த்தாற்போல் இருந்தது. சற்றே கலங்கலாக வந்த நினைவு ஸ்திரம் பெற்றது. இவர்... இவர் நான் ஆறாவது படிக்கும் போது எனக்கு ஹிந்தி பயிற்றுவித்த மிஸ்ஸின் கணவர். இவர் ஒரு ஜோசியர். இங்கென்ன செய்கிறார்?

"அய்யா வணக்கம்.."

மெல்லக் கண்களைத் திறந்தவர், மலர்ந்தார். "வாப்பா...சௌக்கியமா?"

எனக்குத் தான் இவரைத் தெரியும். இவருக்கு என்னைத் தெரியாதே? இவ்வளவு அன்பாக வரவேற்கிறார்?

"வா..வா... உக்காரு". அருகில் அமர வைத்துக் கண்களுக்குள் உற்றுப் பார்த்து புன்னகை. தலை மேல் கை வைத்து ஆசீர்வாதம்.

"கவலைப் படாதே.. நடக்குமோ நடக்காதோன்னு ஊசலாட்டம் இனிமே இல்லை. நிச்சயம் நடக்கும் ."

என்ன சொல்கிறார் இவர்... நடந்து விடுமா..சந்தோஷத்தில் தொண்டையில் எச்சில் முழுங்கும் க்ளக் சத்தம் வெளியில் கேட்டது. சிரித்தார்.

"அவளோடு நிச்சயம் சேர்ந்துடுவே.. அவளும் ஒத்துப்பா. வீட்ல எல்லாரும் ஒத்துப்பா.அவாத்துல, உங்காத்துல, எல்லாரும்"

மேலும் மேலும் சந்தோஷம். பொங்கி வழியும் சந்தோஷம். கட்டுப் படுத்த முடியாத சந்தோஷம்.கரை புரண்டு கறைகளையெல்லாம் அடித்துக் கொண்டு மூழ்கடித்து ஹோவெனப் பரவும் சந்தோஷம்.சந்தோஷத்தில் வியர்க்குமா என்ன? எனக்கு வியர்த்தது.

" நாளைக்கு சாயங்காலம் நாலரை மணிக்கு 4.4 அலைவரிசையில ரேடியோவுல ஒரு பாட்டு வரும். உன் வாழ்க்கைக்கான பாட்டு அது. மறக்காமல் கேளு. உன்னதப் படுவாய்".

"94..4 அலைவரிசையா அய்யா?"

மீண்டும் சிரிப்பு. " நான் சொன்னேனே சரியா கேக்கலையா... 4.4 தான்".

புரியவில்லை. 4.4 எப்படி?... மேலும் கேட்க ஏனோ தோன்றவில்லை.. விடை பெற்றுக் கொண்டு நகர்ந்தேன்.

வெளியில் சூழ்நிலை மாறவில்லை. ஆனால் புத்திக்கு எட்டியிருந்த செய்தி எல்லாவற்றையும் குளுமையாக்கி இருந்தது.லாரிகள் அழகாகத் தெரிந்தன.

வீட்டை நோக்கி ஒற்றைக் கால் செருப்புடன் நடந்தேன்.பின்னோக்கித் தான்.

.................

அம்மா அப்பா எல்லாம் கீழே தரையில்.ஆச்சர்யமாக அவளின் அப்பா அம்மாவும் அங்கேயே அருகில். இவர்கள் எப்போது ராசியானார்கள் என்று யோசனையுடன் நான் சோபாவில். கண்கள் டி வியில். ஏதோ ஒரு படம். என்ன படம்? மனதில் பதியவில்லை. இருந்தும் பார்த்துக் கொண்டிருந்தேன்.மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் சொன்னது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.எப்படி? 4.4? எப்படி?

அவள் மெல்ல உள்ளே இருந்து வந்தாள். நைட்டி அணிந்திருந்தாள். அறை முழுக்க ஷாம்பூ மணம். தலை குளித்திருந்தாள். இன்னேரத்துக்கு என்ன குளியல்? அந்த சூழலில் அவள் அவ்வளவு அழகு. என்னைப் பார்த்தாள். என்னையே பார்த்தாள். நானும் பார்த்தேன். மோகனமாகச் சிரித்தாள். சிரித்தேன். மீண்டும் சந்தோஷம் கரை உடைத்துக் கொண்டு பாயத் தொடங்கியது. தலையைத் துடைத்துக் கொண்டே மெல்ல நடந்து வந்தாள். மெல்ல சோபாவில் அமர்ந்தாள்.

அவள் அருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதே போதுமானதாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து டி வியில் கண் பதித்திருந்தவள் மெல்ல தோளில் சாய்ந்தாள். அம்மா திரும்பிப் பார்த்தாள். அப்புறம் அப்பா. அப்புறம் அவள் அம்மா.பிறகு அப்பா. ஒருவர் ஒரு வார்த்தை பேசவில்லை. மீண்டும் டி வி யில் பார்வையை பதித்துக் கொண்டனர். எப்படி இது? முதலில் எப்படி இவள் என்னை ஏற்றாள்? தெரியவில்லை.

இவர்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை? அதுவும் தெரியவில்லை.ஏன் இப்படி எல்லாம் அளவு கடந்த சந்தோஷமாக இருக்கிறது. புலப்படவில்லை.

இருந்தும் சந்தோஷத்தில் தானாக புன்னகை விரிந்தது.

அருகில் இருந்த மொபைலை எடுத்து அதே புன்னகையுடன் ரேடியோவை ஆன் செய்தேன். அலைவரிசைத் தேடலை நிமிண்டினேன். முதல் சேனலாக 4.4 கண் சிமிட்டி  சிரித்தது. நானும் சிரித்தேன். ஹிந்தி மிஸ்ஸின் கணவர் தாடிக்குள்ளிருந்து சிரித்தார். தோளில் சாய்ந்திருந்தவளின் கூந்தலில் இருந்து ஷாம்பூ மணம் அலையலையாய்ப் படர்ந்து மூச்சடைக்கச் செய்தது. ஆனாலும் இன்பமாக இருந்தது.

ஹெட் போன் எடுத்து காதில் மாட்டிக் கொண்டு 4.4 ஐ கேட்கத் தயாரானேன்.வாழ்க்கைக்கான பாட்டு. உன்னதப் படுத்தும் பாட்டு. என்னவாக இருக்கும்?


-------------------------------

உச்சஸ்தாயியில் அலாரம் அடிக்கத் துவங்கியது.


Tuesday, June 10, 2014

டியர் இனியா


டியர் இனியா...

எதற்காக இந்தக் கடிதம்? தபால்களும் தந்திகளும் ஏன், கையால் எழுதுவதே வழக்கொழிந்து போய் அலைபேசித் திரையையும் ஐபேட் திரையையும் காதலிகள் போலவும் காதலன்கள் போலவும்  தடவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எதற்கு இந்தக் கடிதம்?

என்னவோ. எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் பழக்கமில்லாமல் கை வலித்தாலும் , கோழி குப்பை கிளறியதை விட மோசமான கையெழுத்தாயிருந்தாலும் பரவாயில்லை என்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீ எப்படி இருக்கிறாய்? தமிழ் நன்றாக இருக்கிறாளா? என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

சரி..

கடிதத்தை எங்கிருந்து தொடங்கட்டும்?

நாம் முதன் முதலில் சந்தித்தது, சண்டை போட்டது, பேசியது அப்புறம் நான் ப்ரொபோஸ் செய்தது, நீ என்னை அலைய விட்டு ஓகே சொன்னது இதெல்லாம் பலப் பல தமிழ்ப் படங்களில் பார்த்து சலித்தாகி விட்டது. அதெல்லாம் வேண்டாம்.

நாம் இருவரும் உனக்குப் பிடித்த திருச்செந்தூர் கோவிலில் போய்க் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை கண்கள்  விரியப் பகிர்ந்து கொண்டாயே .. அங்கிருந்து தொடங்கட்டுமா... ம்ம்.. சரி..

அப்போது உன் கண்களில் தெரிந்த ஆர்வம். நீ வாக்கியத்தை முடிக்கும் முன்னரே நான் முடிவு செய்து விட்டேன். நம் கல்யாணம் திருச்செந்தூரில் தானென்று.

அவ்வப்போது உன் அப்பா பாராமுகமாய் இருக்கிற கவலை வந்து சீண்டிக் கொண்டே இருந்தாலும் கல்யாண வேலைகள் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டேன். எல்லாம் நீ கொடுத்த தைரியத்தில் தான்.

எனக்கு அந்தக் கவலையும் இல்லை. உன்னைத் தவிர என்னை என்னடா  என்று கேட்க யாருமில்லை.

ரவியும் சுகுவும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தது, நாம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஓயாமல் பார்த்துக் கொண்டே இருந்தது, நடு நடுவே நினைவு வந்த போது ஒருவருக்கொருவர் தைரியம் சொல்லிக் கொண்டது, எல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா? எனக்கு இருக்கிறது. அழுத்தமாக.

கோவிலில் தாலி கட்டி முடிந்தவுடன் " போடா நீயும் உன் சம்பிரதாயமும்" என்று கொஞ்சலாகக் கடிந்து விட்டு சட்டென்று என் தோளில் சாய்ந்து கொண்டாயே? இன்னமும் கூட லேசாக வாடிய மல்லிகையின் மணம் வருகிறாற் போலிருக்கிறது அவ்வப்போது என் தோள் மீதிருந்து.

உன் அப்பாவைப் போய்ப் பார்த்த எபிசோடை மட்டும் தயவு செய்து மறந்து விடு என்று சொல்லத் தான் ஆசை. என்னாலேயே முடியவில்லை. உன்னை எப்படி சொல்ல? இருந்தாலும் அவ்வளவு சொல்லி இருக்க வேண்டாம் அவர்.

ஒரே நல்ல விஷயம் என்ன தெரியுமா...அவ்வளவு தகிக்கும் கோபத்திலும் அவர் என்னை மட்டுமே திட்டினார். அந்த வகையில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.

அது சரி, இனியா என்று பெயர் உனக்கெப்படி வைத்தார் உன் அப்பா?.முணுக்கென்றால் உனக்கு வரும் கோபத்தை எந்த வகையிலும் உன் பேரோடு சேர்த்துப் பார்க்க முடியாதே. இதில் முரண் என்ன தெரியுமா.... அந்தக் கோபத்தில் தான் நான் விழுந்தேன். உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கோபப் படுத்தி சூடேற்றுவதும் கொதிநிலை வந்ததும் சட்டென்று மண்டியிட்டு மடங்கி உன்னை சமாதானப் படுத்துவதும் எனக்குப் பிடித்த விளையாட்டு தெரியுமோ?

அப்போது கோபமும் அடக்க மாட்டாத புன்னகையும் கலந்து நீ பார்ப்பாயே ஒரு பார்வை. உயர்தர ஸ்காட்ச்சின் மூன்றாவது ரவுண்டில் ஏறும் மிதமான அற்புத போதையைப் போன்றது அது.

உனக்காகவே சுற்றிலும் தோட்டம் இருப்பது போல் வீட்டை தேடித் தேடிப் பார்த்துக் கண்டுபிடித்தேன் நாம் குடியிருக்க. ஆனால் உனக்கு தோட்டம் வைக்க வளர்க்கவெல்லாம் ஆசை கிடையாது. பார்க்க மட்டுமே. நல்ல வேளை எனக்கு உன்னை சந்தோஷப் படுத்துவது மட்டுமே குறியாய் இருந்தது. அதனால் வீட்டில் டம்ளரைக் கூட நகர்த்தி வைக்காத எனக்கு தோட்ட வேலை பிடித்துப் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.





அந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு கொசுக் கடியையும் மீறி ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு முத்த விளையாட்டு விளையாடுவோம் ஞாபகம் இருக்கிறதா.. நான் முத்தமிட முயற்சிப்பேன். நீ தடுக்க வேண்டும். பிறகு உன் முறை. நான் தடுப்பேன். யார் அதிக முத்தங்கள் இடுகிறோமோ ஜெயித்ததாக அர்த்தம். ஒரு நாள் கூட நான் ஜெயிக்க மாட்டேன். உன் முத்தத்தை தடுக்க நான் என்ன மடையனா?  சும்மா தடுப்பது போல் பாவனை செய்வேன். உனக்கும் அது தெரியும்.

எப்போதும் அது குறித்து புகார் செய்வாய். சண்டை போடுவாய். ஆனாலும் ஒவ்வொரு முறையும் உற்சாகமாகத் தான் விளையாடுவோம் அந்த ஆட்டத்தை.எழுதும் போதே எனக்கு இதழோரம் புன்னகை தேங்கி நிற்கிறது. . கன்னத்தைக் குறி வைத்து நீ இடும் முத்தம் நான் தடுத்ததால் கழுத்தில் தான் போய்ப் பதியும்.கழுத்தை லேசாகத் தொட்டுப் பார்க்கிறேன். உன் ஈரம் படிந்தாற் போலிருக்கிறது.

சமைக்கத் தெரியாமல் சமைக்கிறோம் பேர்வழி என்று ரெண்டு பேரும் சேர்ந்து சமையலறையை அதகளம் செய்ததும் பக்கத்து வீட்டிலிருந்து வந்து விசாரித்து விட்டுத் தலையில் அடித்துக் கொண்டு போனதும் ரெண்டு பேரும் சோபாவில் விழுந்து புரண்டு சிரித்தது ஞாபகம் இருக்கிறதா உனக்கு? அதற்கு அடுத்த நாளிலிருந்து தான் நீ அடிக்கடி சோர்ந்து போக ஆரம்பித்தாய். மார்னிங் சிக்னஸ் என்றாய்.. என்னென்னவோ சொன்னாய்..

டாக்டரிடம் செக்கப்புக்குப் போன அந்த தினம்....சினிமாக்களில் பார்த்து மட்டுமே அது போன்ற விஷயங்கள் பழகியிருந்த எனக்கு அது புது அனுபவம். டாக்டர் பரிசோதனை எல்லாம் முடித்த பின் நீ கன்சீவ் ஆகியிருக்கிறாய் என்று சொன்னாரே.. அப்போது . அந்தக் கணம்.. அந்த மாபெரும் விஷயம் என் மூளைக்குப் போய்ச் சேர கொஞ்சம் நேரமானது.

அதுவுமில்லாமல், அந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை வேறு. ஹோம் வொர்க் செய்யாத குழந்தை போல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றேன்.. ஆனால் நீ என்னை சரியாகப் புரிந்து கொண்டாய்.

டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு வந்து வீட்டில் நம் கட்டிலில் என்னை மடியில் கிடத்திக் கொண்டு தலையைக் கோதிக் கொண்டே, இனிமேல் நாம் ரெண்டு பேரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எனக்கு என்ன பொறுப்பு வேண்டும் , எது சரி எது தப்பு செய்யலாம் செய்யக் கூடாது என்று பாடம் எடுத்தாயே....எந்த வகுப்பிலும் நான் பாடத்தை அவ்வளவு ஸ்வாரஸ்யமாகப் படித்ததில்லை. உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவ்வப்போது கோட்டை விட்டாலும் நீ சொன்ன நிறைய விஷயங்கள் மனதில் அப்படியே நிற்கின்றன. இப்பவும் அதில் பலவற்றைப் பின் பற்றுகிறேன்.

அது சரி, உனக்கு  எங்கிருந்து வந்தது அவ்வளவு பொறுப்புணர்ச்சியும் சட்டென்ற முதிர்ச்சியும்? எவ்வளவு விஷயங்கள் சொன்னாய்?ஒவ்வொரு நாளும் நீ எனக்கு ஆச்சரியம் தான். அதுவும் தினமும் புதிய ஆச்சரியம்.

ஆனால் அதற்குப் பிறகு நான் அவ்வளவு சீக்கிரம் சமைக்கக் கற்றுக் கொண்டது ஆச்சரியம் தான். நீ பக்கத்தில் இருந்து சொல்லச் சொல்ல அவ்வப்போது உன்னை முத்தமிட்டபடியே சமைத்த நாட்கள் சொர்க்கம்.

இந்த விஷயம் கேள்விப்பட்டு எல்லா அப்பாக்களையும் போல் மனம் மாறி விட்டேனென்று வந்த உன் அப்பாவிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை நீ. நான் தான் காபி போட்டுக் கொடுத்து அவரிடம் பேசி அனுப்பி வைத்தேன். அப்போது தான் முதன் முதலில் நான் உன்னைக் கண்டித்தேன் என்று நினைக்கிறேன்.அதற்கு நீ சொன்ன பதில் தான் நீ நானாக இருக்கக் காரணம் என்று தெரிந்து கொண்டேன். இன்னும் எவ்வளவு அன்பு உனக்குக் கொடுத்தால் தகும் என்று புரியாமல் தவித்தேன். இதெல்லாம் உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

குழந்தைக்குப் பெயர் நாம் ரெண்டு பேரும் சேர்ந்து தேடிய வைபவம் இருக்கிறதே... அடேங்கப்பா... எல்லா அப்பா அம்மா போலவும் தான் நாம் தேடினோம் என்று மூளை சொன்னாலும் மனசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது. எத்தனை அலசல் எத்தனை தேடல், எத்தனை வடிகட்டல். ஆனால் கடைசியில் தேர்ந்தெடுத்தது, நாம் ரெண்டு பேரும் அழகான தமிழ்ப் பெயராக வேண்டும் என்று முதலில் குறித்து வைத்திருந்த பெயர் தான். தமிழ். அந்தப் பெயரை ஒவ்வொரு முறை சொல்லும் போதும் உனக்கு அவ்வளவு சந்தோஷம். பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதே பெயர்.

நான் பெண்ணென்றும் நீ பையனென்றும் சொல்லிக் கொள்வோம்.சிரித்துக் கொள்வோம்.

வழக்கம் போல் தானே அன்று காபி கொடுக்க உன்னை எழுப்பினேன்.ஏன் நீ எழுந்திருக்கவில்லை? எனக்கு இன்னும் கோபம் தான் உன் மீது.எழுந்தவுடன் காபி போடும் நேரம் மட்டும் தான் தனியாய் இருந்து பழக்கம் எனக்கு. திடீரென்று நீ இந்த மாதிரி புதுப் பழக்கமெல்லாம் செய்தால் எப்படி? வீடே வெறுமை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை எனக்கு. வேறு வழி தெரியாமல் உன் அப்பாவுக்கு தான் போன் செய்தேன். அப்பா வந்தார். அப்புறம் யார் யாரோ வந்தார்கள்.

அவ்வளவு சத்தத்திலும் சந்தடியிலும் உன்னால் மட்டும் எப்படி எழுந்திருக்காமல் தூங்க முடிகிறது? கார்டியாக் அரெஸ்ட் அது இதுவென்று என்னென்னவோ சொல்கிறார்கள். எல்லாம் புத்திக்கு எட்டுகிறது. ஆனால் மனதில் ஒரே யோசனை தான். ஏன் நீ எழுந்திருக்கவில்லை? அவர்க்ள் செய்ய சொன்னதயெல்லாம் செய்தேன். அழைத்த இடத்துக்கெல்லாம் போனேன். ஆனால் ஏதோ ஒன்று தப்பாக இருந்தது. உன்னை என்னவோ செய்தார்கள். பிடித்து நிறுத்து சட்டையைப் பிடித்து அறைய வேண்டும் போலிருந்தது. ஆனால் செய்யவில்லை.உடல் தானாக இயங்கிக் கொண்டருந்தது. ஒன்றும் புரியவில்லை.

உன் அப்பா வந்து என்னிடம் பரிவாக ஏதோ பேசினார். எல்ல்லாரும் வந்து என்னை ஒருகூண்டுக்குள் அடைபட்ட ஜந்துவைப் போல் பரிதாபமாகப் பார்த்து விட்டுப் போனார்கள். என்ன எழவு நடந்ததென்றே தெரியவில்லை.

திடீரென்று பார்த்தால் நீ காணவில்லை. ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டேனெங்கிறார்கள். கேட்டுக் கேட்டு எனக்கு சலித்து விட்டது. அதனால் தான் யாரையும் கேட்காமல் நேரடியாக உன்னை வரச் சொல்லலாமென்று இந்தக் கடிதம் எழுதுகிறேன். இதைக் கண்டதும் தந்தி போல் பாவித்து உடனடியாக வந்து சேர். இதற்கு மேலும் என்னால் காலையில் தனியாகக் காபி குடிக்க முடியாது. தமிழையும் அழைத்து வா வரும் போது மறக்காமல்.

அது சரி, இந்தக் கடிதத்தின் உறையில் விலாசம் எழுத வேண்டுமே?  எங்கிருக்கிறாய் என்று சீக்கிரம் சொல்.