“டேய் எனக்கு ஒரே ஒரு
வாட்டி டா”....
“ வேணாண்டா எங்க அப்பா
பார்த்தா அவ்ளோ தான். செமையா அடி விழும்.”
“டேய் டேய் தீபக் ப்ளீஸ்
டா... அதோ அந்த ரோடு வரைக்கும் தாண்டா...”
“ பப்பு வெளாடாதடா... நீ
இது வரைக்கும் சைக்கிள் ஓட்டியே நான் பார்த்ததில்ல... “
“ டேய் அதெல்லாம் நான்
சூப்பரா ஓட்டுவேண்டா... குடுடா... நான் உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன்.
அன்னிக்கு நீ க்ளாஸ்ல உக்காந்து முறுக்கு சாப்பிடும் போது கூட சுமதி மிஸ் சத்தம்
கேட்டு யாருடா அதுன்னு கேட்டாங்கள்ல? நான் சொல்லவே இல்லைல்ல?”
அஸ்திரத்தை வீசியதும் வேறு
வழியே இல்லாமல் கொஞ்சம் கையைப் பிசைந்த தீபக், வீட்டுக்குள்ளிருந்து அம்மா
பார்க்கிறாளா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டான். மனசே இல்லாமல் சைக்கிளை பப்புவிடம்
கொடுத்தான்.
“டேய்...ரொம்ப தூரம்
போகாதடா... சைக்கிள்ல காத்து கம்மியா இருக்கு. அம்மா வேற வந்துடுவாங்க..சீக்கிரம்
வந்துடு. ஒரே ரவுண்டு தான்” என்று அவன் கூறியது எங்கோ தொலைவில் கேட்பது போல்
இருந்தது பப்புவுக்கு. எட்டியும் எட்டாமலும் இருந்த சீட்டின் மேல் ஏறி உட்கார்ந்து
ஹாண்டில் பார் கட கடவென்று ஆட, பயம், உற்சாகம், த்ரில் என சகல உணர்ச்சிகளுடன்
சைக்கிளில் விரைந்தான் பப்பு.
முதல் முறை தீபக்
வீட்டுக்குப் போன போதே பப்புவுக்கு அந்த வீடு ரொம்பப் பிடித்து விட்டது. அது வரை
சினிமாக்களில் மட்டுமே பார்த்துப் பழகி இருந்த ஆள் அமுங்கும் சோபாக்கள், சோகையான
பணக்காரத் தனமான லைட்டுகள், மிக உயரமான சீலிங், எல்லாம் பப்புவை வெகுவாகக்
கவர்ந்து விட்டது.
எல்லாவற்றை விடவும் அவனை அப்பட்டமாக ஈர்த்தது,
தீபக் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அந்த சைக்கிள்.
அப்போது அஞ்சலி படம்
வந்து வெற்றி கரமாக ஓடி முடித்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. கேபிள் டி வி
புண்ணியத்தில், எல்லா வீட்டிலும் வாரத்துக்கு ஒரு முறை அஞ்சலி படம்.
எத்தனை தடவை போட்டாலும்
அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே படத்தைப் பார்ப்பான் பப்பு. செய்திகள்
வாசிக்கும் போது அந்தப் பெண் கட்டியிருக்கும் புடவையைப் பார்க்கவென்றே நியூஸ்
பார்க்கும் பெண்கள் போல், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப பப்பு பார்க்க காரணம்
அதில் வரும் பொடியன்கள் அணிந்து கொண்டு வரும் வித விதமான டிரஸ், ஷூ, கண்ணாடி
அப்புறம் அவர்கள் ஓட்டி வரும் சைக்கிள்களைப் பார்க்கத் தான்.
தீபக் அது வரை தன்னிடம்
சைக்கிள் இருப்பதாக ஸ்கூலில் சொன்னதே இல்லை. அஞ்சலி படத்தில் வருவது மாதிரியே
சைக்கிள். முதல் முறை அவன் வீட்டில் அந்த சைக்கிள் பார்த்ததுமே பப்புவுக்கு அதை
ஒரு தடவையாவது ஓட்டிப் பார்க்க வேண்டுமென்று தீராத ஆசை வந்து விட்டது.
அது மாதிரி சைக்கிள் ஒன்றை
வாங்கித் தர சொன்னால் அப்பா புரட்டிப் புரட்டி எடுக்க சாத்தியங்கள் இருந்ததால்
பப்புவால் வாய் திறக்க முடியவில்லை.வீட்டில் சைக்கிள் வண்டி என்று யதேச்சையாக
பேச்சு வந்தாலே அப்பா டென்ஷனாகிக் கொண்டிருந்தார். காரணம் இல்லாமலா?
அப்போது தான் அப்பா எக்ஸல்
சூப்பர் வாங்கி இருந்தார் புதிதாக.ஒரு மாதமிருக்கும்.காலையில் அவர் ஆபீஸுக்கு
கிளம்பும் போது பப்பு போய் வண்டி மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு “ எப்பப்பா எனக்கு
வண்டி ஓட்ட கத்து குடுக்க போறீங்க?” என்றான். “ முதல்ல நீ வாடகை சைக்கிள்ல குரங்கு
பெடல் அடி. அப்புறம் சீட்ல உக்காண்டு ஓட்டு. அதுக்கப்புறம் வண்டியைப் பத்தி
யோசிக்கலாம். இப்ப இறங்கு” என்று சொல்லி விட்டுப் போனவர், ராத்திரி வீட்டுக்கு
வரும் போது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சோகமே உருவாய் நடந்து வந்தார். வண்டி
தொலைந்து விட்டது.
வண்டி தொலைந்த்தை விட
ஆபீஸில் நண்பர்கள் விசாரணை தான் அப்பாவின் டென்ஷனுக்கு முக்கிய காரணமாக
இருந்திருக்கிறது. சொல்லி வைத்தாற் போல் செய்தியைக் கேள்விப்பட்ட பத்து பேர்
அவரிடம் வந்து, “ வண்டியைப் பத்தி கடேசியா யார் கிட்ட பேசினீங்க?” என்று
கேட்டிருக்கிறார்கள்.
எத்தனை முறை ரீவைண்ட் பண்ணி
பார்த்தாலும் பப்பு முகம் தவிர வேறு யாரும் ஞாபகம் வரவில்லை அவருக்கு.
அதிலிருந்தே, மற்ற நேரங்களில் சாதுவாக இருப்பவர், சைக்கிள், வண்டி போன்ற
வார்த்தைகளைக் கேட்கும் போது மட்டும் கோபாவேசமாகி விடுவார்.
கிட்டாததின் மேல் தானே
வெட்டென ஆசை பிறக்கும்? பப்புவுக்கும் அதே தான். அதனால் தீபக்கின் சைக்கிள் மீது
ஆசை அதிகமானது. என்ன தான் வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டினாலும், அஞ்சலி படத்தில்
பார்த்த பீல் கிடைக்கவில்லை. ஸோ எப்பாடு பட்டாவது தீபக்கின் சைக்கிளை ஓட்டி
விடுவது என்று பப்பு முடிவு பண்ணி விட்டான்.
அவன் வீட்டுக்குப் போகும்
போதெல்லாம் சின்ன சின்ன பிட்டுகளாகப் போட்டுக் கொண்டிருந்தான் சைக்கிள் ஓட்ட.
நாலாவது முறை போகிற போது
தான் முதல் பத்தியில் சொன்ன கான்வர்சேஷன்.எப்படியோ தனக்கு சைக்கிள் ஒழுங்காக
இல்லை, சுமாராகக் கூட ஓட்டத் தெரியாது என்பதையும், இந்த மாதிரி சைக்கிளை நேரில்
பார்ப்பது வாழ்க்கையிலேயே இது தான் முதல் முறை
என்கிற உண்மையையும் கூறாமல் சைக்கிளை வாங்கி வந்து ஓட்டத் தொடங்கியாயிற்று.
“ இந்த ஹாண்டில் பார் ஏன்
இப்படி ஆடிக்கிட்டே இருக்கு?” அதை மேலும் இறுக்கிப் பிடித்தான். ஆட்டம் இன்னும்
அதிகமானது. கண்டு கொள்ளாமல் தீபக்கின் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்து,
சாலையைக் கடந்து கவர்மென்ட் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள் நுழைந்தான்.
பப்புவுக்கு ஒரே பெருமை.
முதல் முறை ( கொஞ்சம் உயரமான ) சைக்கிள் ஓட்டும் போதே ரோடெல்லாம் கிராஸ் பண்ணி
விட்டோமென்று. அங்கிருந்த மரங்களை சுற்றி சுற்றி ஓட்டிக் கொண்டிருந்தான். ஹாண்டில்
பார் ஆட்டம் அப்படியே இருந்தது. கொஞ்ச நேரம் ஓட்டினவன், திரும்பலாம் என்று மெயின்
ரோட்டை நோக்கி ஓட்டினான்.
சாலையின் முனையை நெருங்கும்
வரை வலப் பக்கமிருந்து வந்து கொண்டிருந்த லாரியை அவன் பார்க்கவில்லை. சாலையின்
விளிம்புக்கு வரும் போது தான் பார்த்தான். ஒரே நொடி. பதற்றத்தில் முக்கியமான
விஷயமான பிரேக்கை மறந்து விட்டான் பப்பு. லாரி நெருங்கி விட்டது.அவ்வளவு தான்.
பப்பு ஹாண்டில் பாரிலிருந்து கையையும் பெடலில்
இருந்து காலையும் எடுத்து விட்டான்.
அடுத்த நொடி. என்ன
நடந்ததென்று தெரியவில்லை. பப்பு லாரியின் அடியில் கிடந்தான்.லாரியின் பின் சக்கரம்
அவன் கழுத்துக்கு மிக அருகில் இருந்தது.கொஞ்சம் சுதாரித்த பப்பு, இடப் பக்கம்
திரும்பிப் பார்த்தான். சைக்கிள் லாரியின் முன் சக்கரத்தின் அடியில் கிடந்தது.
சைக்கிளின் முன் பாதி குப்பலாக நொறுங்கிப் போய் இருந்தது.
லாரி டயர் எங்காவது
நகர்ந்து விடப் போகிறது என்றெண்ணி சட்டென்று எழுந்து வெளியில் வந்தான் பப்பு. வலக்
கால் கட்டை விரலில் லேசாக சுருக்கென்றது. குனிந்து பார்த்தான். லேசான சிராய்ப்பு.
அவன் உடல் மொத்தத்திலும் ஏற்பட்டிருந்தது அந்த ஒரு காயம் தான்.
“அப்பாடி...அடி பெருசா படல.
ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக வேண்டியதில்ல. திட்டு மட்டும் தான் கிடைக்கும். அடிலருந்து
தப்பிச்சிடலாம்” மனதுக்குள் எண்ணி சிரித்தபடியே சட்டை டிராயரில் அப்பியிருந்த
மண்ணைத் தட்டிக் கொண்டான்.
அதற்குள் கூட்டம் சேர்ந்து
விட்டது. ஹாரன் அடிக்காமல் வந்ததற்காக எல்லாரும் லாரிக் காரனை திட்ட ஆரம்பித்து
விட்டனர். பப்புவுக்கு அப்போது தான் உறைத்தது. “ ஐயையோ...சைக்கிளை எப்படி
குடுக்கப் போறோம்?” மனதுக்குள் பயம் வந்தது.
சுற்றும் முற்றும்
பார்த்தான். அவன் பக்கத்து வீட்டு டெய்லர் அங்கிள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு
வந்து கொண்டிருந்தார். பப்புவுக்குக் கொஞ்சம் நிம்மதியானது.பப்புவைப் பார்த்ததும்
பதறிய அவர், அருகில் வந்து பார்த்தார்.ஏதாவது காயம் இருக்கிறதா என்று சோதித்தார்.
லாரிக்காரனைப் பார்த்து
நாலு சத்தம் போட்டு விட்டு சைக்கிள் யாருடையது என்று கேட்டார்.சொன்னான். அருகில்
இருந்த யாரையோ கூப்பிட்டு ஏதோ சொல்லி விட்டு, பப்புவிடம் “ நீ வாப்பா வீட்டுக்கு
போகலாம்” என்று சைக்கிளில் முன்னால் உட்கார வைத்துக் கொண்டு வீட்டில் கொண்டு போய்
விட்டதோடு அம்மாவிடம் சொல்லியும் விட்டார். அம்மா கன்னா பின்னாவென்று திட்டியதோடு
முதுகில் நாலு போடு போட்டாள்.
அம்மா அடித்தால் எப்போதுமே
அவ்வளவாக வலிக்காது.. அதனால் பப்பு அதைப் பற்றி அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.
அவன் கவலையெல்லாம் அப்பாவிடம் அடி விழக் கூடாதென்பது தான்.செம்மையா வலிக்கும்.
அடித்ததோடு இல்லாமல், அம்மா
அவனை இழுத்துக் கொண்டு தீபக் வீட்டுக்கே சென்றாள். வழியெங்கும் பொட்டு பொட்டென்று
அவ்வப்போது முதுகில் போட்டுக்கொண்டே இருந்தாள். தீபக் வீட்டுக்குப் போய் அவன்
அம்மாவிடம் பப்புவின் தப்புக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சைக்கிள்
உடைந்ததற்கு எவ்வளவு என்று சொன்னால் தந்து விடுவதாகவும் சொன்னாள்.
வேண்டாமென்று
மறுத்த அந்த அம்மாள், வீட்டை சுற்றிக் காட்டி காபி போட்டுக் கொடுத்து ரொம்ப நேரம்
பெருமை பேசிக் கொண்டிருந்தாள்.
அதற்குள் பப்பு தீபக்கை
சமாதானப் படுத்தி விட்டிருந்தான். இருவரும் வழக்கம் போல் தோள் மேல் கை போட்டு
பேசிக் கொண்டிருந்தனர் கிளம்பும் வரை.
ராத்திரி அப்பா வீட்டுக்கு
வந்ததும் அம்மா வத்தி வைத்து விட்டாள். அடிக்கக் கை ஓங்கிய அப்பாவை, “ போதும்
ஏற்கனவே வேண்டிய அளவு குடுத்தாச்சு” என்று தடுத்து விட்டாள். அப்பா அவனை
முறைத்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு முறைத்துக் கொண்டே பாட்டு கேட்டு விட்டு
முறைத்துக் கொண்டே தூங்கிப் போனார்.
எப்படியோ. அடி வாங்காமல்
தப்பியதே போதுமென்றிருந்தது பப்புவுக்கு.
அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போனதும் இன்னொரு
ஏழரை காத்திருந்தது. முதல் பீரியடில் வந்த சுமதி மிஸ் கேஸ் விசாரிக்கும்
இன்ஸ்பெக்டர் போல் பப்புவைக் கூப்பிட்டு கடுமையாக விசாரித்ததோடு காலை வகுப்புகள்
முழுவதும் முட்டி போட வைத்து விட்டார்.
ஸ்கூல் முடியும் போது பப்பு
ரொம்ப சோர்ந்து விட்டான். தொங்கிப் போய் வெளியில் வந்தான். அப்போது தான் பக்கத்து
க்ளாஸ் சதீஷைப் பார்த்தான். பப்புவின் கண்கள் விரிந்தன. சதீஷ் தன்னுடைய சைக்கிளை
ஸ்டாண்டிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தான். அதே அஞ்சலிப் பட சைக்கிள். எதையும்
யோசிக்காமல் பப்பு வேகமாக அவனிடம் ஓடினான். மூச்சு வாங்கிக் கொண்டே “ டேய்
சதீஷ்...”
திரும்பிப் பார்த்தான்.
புன்னகை. அவனும் புன்னகை.
பல நாள் பழகிய உயிர்த்
தோழன் போல் பப்பு அவனிடம் கேட்டான். “ சதீஷ்...உன் வீடு எங்கடா இருக்கு?”....
No comments:
Post a Comment